عن عبد الله بن عباس رضي الله عنهما قال: كنت خلف النبي صلى الله عليه وسلم يوماً فقال يا غلام، إني أعلمك كلمات: «احْفَظِ اللهَ يحفظْك، احفظ الله تَجِدْه تُجَاهَك، إذا سألت فاسأل الله، وإذا اسْتَعَنْتَ فاسْتَعِن بالله، واعلمْ أن الأمةَ لو اجتمعت على أن ينفعوك بشيء لم ينفعوك إلا بشيء قد كتبه الله لك، وإن اجتمعوا على أن يَضرُّوك بشيء لم يَضرُّوك إلا بشيء قد كتبه الله عليك، رفعت الأقلام وجفت الصحف». وفي رواية: «احفظ الله تَجِدْه أمامك، تَعرَّفْ إلى الله في الرَّخَاء يَعرِفْكَ في الشِّدة، واعلم أنَّ ما أخطأَكَ لم يَكُنْ ليُصِيبَكَ، وما أصَابَكَ لم يَكُنْ لِيُخْطِئَكَ، واعلم أن النصرَ مع الصبرِ، وأن الفرجَ مع الكَرْبِ، وأن مع العُسْرِ يُسْرًا».
[صحيح] - [رواه الترمذي وأحمد بروايتيه]
المزيــد ...

அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: ஒரு நாள் நான் நபி (ஸல்) அவர்களின் பின்னால் அமர்ந்திருந்தேன்.! அப்போது அவர்கள் என்னிடம் சிறுவனே! நான் சில அறிவுரைகளைக் கற்றுத் தருகின்றேன் என்று சொன்னார்கள்: நீ அல்லாஹ்வை பாதுகாத்துக்கொள். அவன் உன்னைப் பாதுகாப்பான். நீ அல்லாஹ்வை பாதுகாத்துக்கொள். அவனை உனக்கு முன் கண்டுகொள்வாய். நீ கேட்டால் அல்லாஹ்விடமே கேள். உதவி தேடினால் அல்லாஹ்விடமே தேடு. அறிந்து கொள்! ஒட்டுமொத்த சமூகமும் ஒன்று திரண்டு உனக்கு ஏதாவது நன்மை செய்திட முயன்றாலும் உனக்கு அல்லாஹ் ஏற்கனவே ஏற்படுத்தி வைத்துள்ளதைக் காட்டிலும் அதிகமாக எந்த நன்மையையும் அவர்களால் செய்திட முடியாது. இன்னும் ஒட்டுமொத்த சமூகமும் ஒன்று திரண்டு உனக்கு ஏதாவது தீங்கிழைக்க முயன்றாலும் அல்லாஹ் உனக்கு ஏற்கனவே குறித்து வைத்தவற்றைக் கொண்டல்லாமல் எந்தக் தீங்கையும் அவர்களால் செய்திட முடியாது. பேனாக்கள் உயர்த்தப்பட்டு விட்டன. ஏடுகள் காய்ந்து விட்டன. பிறிதொரு நபிமொழித் தொகுப்பில் பின்வருமாறு இடம் பெற்றுள்ளது : நீ அல்லாஹ்வை பாதுகாத்துக்கொள். அவனை உன் முன் கண்டுகொள்வாய். நீ செழிப்பாக இருக்கும் போது அல்லாஹ்வை நினைவு கூறு. கஷ்டத்தின் போது அவன் உன்னை நினைவுகூர்வான். அறிந்து கொள்: உனக்குக் கிட்டாமல் சென்றவைகள் உனக்கு விதிக்கப்படவில்லை. உனக்குக் கிட்டியவைகள் உன்னைக் கடந்து சென்று விடும்படி விதிக்கப்படவில்லை. பொறுமையுடன்தான் வெற்றியுண்டு. துன்பத்துடன்தான் விடிவுண்டு. கஷ்டத்துடனே தான் இலகுமுண்டு என்பதை அறிந்து கொள்.
ஸஹீஹானது-சரியானது - இதனைத் திர்மிதி பதிவு செய்துள்ளார்

விளக்கம்

இப்னு அப்பாஸ் (ரலி) என்ற இந்தச் சிறுவனுக்கு நபி (ஸல்) அவர்கள் அனைத்து நிலைகளிலும் அல்லாஹ்வின் ஏவல், விலக்கல்களைப் பேணுதலை உள்ளடக்கிய அருமையான உபதேசங்களை வழங்குகின்றார்கள். சிறுவயதிலேயே அவர்களுடைய அடிப்படை நம்பிக்கையை சீராக்குகின்றார்கள். படைப்பாளன் அல்லாஹ் மாத்திரம்தான். அவனையன்றி வல்லமையுடையோர் யாருமில்லை, விடயங்களைத் திட்டமிடக்கூடியவன் அவனைத் தவிர யாருமில்லை. பொறுப்புச் சாட்டல், பிரார்த்தனை என்பவற்றில் அவனுக்கும் அடியானுக்கும் இடையில் இடைத்தரகர் அவசியமில்லை, சோதனைகள் இறங்கும் போதும், வேதனைகள் இறங்கும் போதும் எதிர் பார்த்து ஆதரவு வைக்கப்படுபவன் அவன் மாத்திரமே. மேலும் நபியவர்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் உள்ளத்தில் விதியைப் பற்றிய நம்பிக்கையை விதைத்தார்கள். நலவு, கெடுதி அனைத்தும் அல்லாஹ் நிர்ணயித்து, தீர்ப்புச் செய்த பிரகாரமே நடைபெறுகின்றன. தாம் விரும்புவதையெல்லாம் நிகழ்த்துவது மனிதர்களின் கரங்களில் இல்லை, அல்லாஹ்வின் அனுமதியின்றி எதுவும் நிகழாது என்ற அடிப்படைகளை விதைத்தார்கள்.

மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு ஸ்பானிய மொழி துருக்கிய மொழி உருது இந்தோனேஷியன் போஸ்னியன் ரஷியன் வங்காள மொழி சீன மொழி பாரசீக மொழி ஹிந்தி மொழி வியட்நாம் மொழி சிங்கள மொழி உய்குர் மொழி குர்தி ஹவுஸா போர்த்துகீசியம் மலயாளம் தெலுங்கு ஸ்வாஹிலி பர்மா தாய்லாந்து ஜெர்மன் ஜப்பான் بشتو الأسامية الألبانية السويدية الأمهرية الهولندية الغوجاراتية الدرية
மொழிபெயர்ப்பைக் காண

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. பிராணிக்கு சக்தியிருந்தால் அதன் மீது இன்னொருவரை ஏற்றி சவாரி செய்யலாம்.
  2. தான் கற்பிக்கவிருக்கும் விடயத்தில் ஆர்வம் அதிகரிக்கவும், உள்ளம் ஏற்றுக் கொள்ளவும் முன்கூட்டியே ஆசிரியர் மாணவரிடம் உனக்குக் கற்பிக்கப் போகின்றேன் என்று கூறுவது சிறந்தது.
  3. தன்னை விட வயது, தரத்தில் குறைந்தவர்களுடன் நபியவர்கள் கனிவாக நடந்து கொள்வார்கள். "சிறுவனே! நான் சில அறிவுரைகளைக் கற்றுத் தருகின்றேன்" என்ற வார்த்தை இதனை உணர்த்துகின்றது.
  4. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களது சிறப்பு இங்கு தெளிவாகின்றது, அவர்கள் சிறுவனாக இருந்தும் இப்போதனைகளைக் கற்கத் தகுதியுடையவராக நபியவர்கள் கருதியுள்ளார்கள்.
  5. சிலவேளை கூலி அந்த செயலுக்குற்பட்டதாக அமையும்.
  6. அல்லாஹ்வை மாத்திரமே சார்ந்து, அவனிடமே பொறுப்புச் சாட்டுமாறு ஏவப்பட்டுள்ளது, பொறுப்பாளிகளில் அவனே மிகச் சிறந்தவன்.
  7. அனைத்துப் படைப்பினங்களும் இயலாதவர்கள், அல்லாஹ்வின் பால் தேவையுடையவர்கள்.
  8. இவ்வுலகு பல துன்பங்களுக்குட்ப்பட்டது, எனவே அதன்போது பொறுமையாக இருப்பது அவசியமாகும்.
  9. கழா, கத்ர் (விதி) மீது திருப்தி கொள்ளுதல்
  10. அல்லாஹ்வின் மார்க்கத்தை வீணடித்தவர்களை அவனும் வீணடிப்பான், பாதுகாக்க மாட்டான்.
  11. அல்லாஹ்வின் மார்க்கத்தைப் பாதுகாத்தவர்களுக்கு அவன் நேர்வழி காட்டி, நல்லவற்றின்பால் வழி காட்டுகின்றான்.
  12. ஒரு மனிதனுக்கு கஷ்டம் ஏற்பட்டால் அதன்பின் இலகுவை எதிர்பார்க்கட்டும் என்ற மகத்தான நற்செய்தி இந்நபிமொழியில் உள்ளது.
  13. சோதனைகள் ஏற்படும் போது, நேசத்துக்குரியவர்களை இழக்கும் போது அடியானுக்கு பின்வரும் வார்த்தை ஆருதல் அளிக்கின்றது : "அறிந்து கொள்: உனக்குக் கிட்டாமல் சென்றவைகள் உனக்கு விதிக்கப்படவில்லை. உனக்குக் கிட்டியவைகள் உன்னைக் கடந்து சென்று விடும்படி விதிக்கப்படவில்லை". துன்பங்கள் ஏற்படும் போது இதில் முதல் வசனமும், நேசித்தவரை இழக்கும் போது இரண்டாம் வார்த்தையும் ஆருதலாக இருக்கின்றது.
மேலதிக விபரங்களுக்கு