عَنْ أَبٍي سَعِيدٍ الخُدْرِيَّ رَضِيَ اللَّهُ عَنْهُ:
أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ جَلَسَ ذَاتَ يَوْمٍ عَلَى المِنْبَرِ وَجَلَسْنَا حَوْلَهُ، فَقَالَ: «إِنِّي مِمَّا أَخَافُ عَلَيْكُمْ مِنْ بَعْدِي، مَا يُفْتَحُ عَلَيْكُمْ مِنْ زَهْرَةِ الدُّنْيَا وَزِينَتِهَا» فَقَالَ رَجُلٌ: يَا رَسُولَ اللَّهِ، أَوَيَأْتِي الخَيْرُ بِالشَّرِّ؟ فَسَكَتَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقِيلَ لَهُ: مَا شَأْنُكَ؟ تُكَلِّمُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلاَ يُكَلِّمُكَ؟ فَرَأَيْنَا أَنَّهُ يُنْزَلُ عَلَيْهِ؟ قَالَ: فَمَسَحَ عَنْهُ الرُّحَضَاءَ، فَقَالَ: «أَيْنَ السَّائِلُ؟» وَكَأَنَّهُ حَمِدَهُ، فَقَالَ: «إِنَّهُ لاَ يَأْتِي الخَيْرُ بِالشَّرِّ، وَإِنَّ مِمَّا يُنْبِتُ الرَّبِيعُ يَقْتُلُ أَوْ يُلِمُّ، إِلَّا آكِلَةَ الخَضْرَاءِ، أَكَلَتْ حَتَّى إِذَا امْتَدَّتْ خَاصِرَتَاهَا اسْتَقْبَلَتْ عَيْنَ الشَّمْسِ، فَثَلَطَتْ وَبَالَتْ، وَرَتَعَتْ، وَإِنَّ هَذَا المَالَ خَضِرَةٌ حُلْوَةٌ، فَنِعْمَ صَاحِبُ المُسْلِمِ مَا أَعْطَى مِنْهُ المِسْكِينَ وَاليَتِيمَ وَابْنَ السَّبِيلِ - أَوْ كَمَا قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ - وَإِنَّهُ مَنْ يَأْخُذُهُ بِغَيْرِ حَقِّهِ، كَالَّذِي يَأْكُلُ وَلاَ يَشْبَعُ، وَيَكُونُ شَهِيدًا عَلَيْهِ يَوْمَ القِيَامَةِ».

[صحيح] - [متفق عليه] - [صحيح البخاري: 1465]
المزيــد ...

அபூ ஸஈத் அல் குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
ஒரு நாள் நபி (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடைமீது அமர்ந்தார்கள். நாங்களும் அவர்களைச் சுற்றி அமர்ந்தோம். அப்போது அவர்கள், “எனக்குப் பின் உங்களுக்கிடையே உலக வளங்களும் அதன் கவர்ச்சிப் பொருட்களும் தாராளமாகத் திறந்துவிடப்படுவதைப் பற்றியே நான் அஞ்சுகிறேன்” எனக் கூறினார்கள். ஒருவர், “அல்லாஹ்வின் தூதரே! (செல்வம் என்ற) நன்மை தீமையை உருவாக்குமா?” எனக் கேட்டதும் நபி (ஸல்) அவர்கள் மௌனமாக இருந்தார்கள். அப்போது அந்த மனிதரிடம், “உமது நிலைமை என்ன? நீர் நபி (ஸல்) அவர்களிடம் பேசுகிறீர்; ஆனால், நபி (ஸல்) அவர்களோ உம்மிடம் பேசாமலிருக்கிறார்களே!” எனக் கேட்கப்பட்டது. நாங்கள் நபி (ஸல்) அவர்களுக்கு வேத அறிவிப்பு (வஹீ) அருளப்படுகிறது எனக் கருதினோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் வியர்வையைத் துடைத்து விட்டு, “கேள்வி கேட்டவர் எங்கே?” என அவரைப் பாராட்டுவதைப் போன்று கேட்டார்கள். பிறகு, “நன்மையானது தீமையை உருவாக்காதுதான்; வசந்த காலத்தில் விளைகின்ற (பயிர்கள்) ஒவ்வொன்றும் (கால்நடைகளை, வயிறு புடைக்கத் தின்ன வைத்துக்) கொன்று விடுகின்றன; அல்லது கொல்லும் அளவுக்குச் சென்றுவிடுகின்றன; பச்சைப் புற்களைத் தின்னும் கால்நடையைத் தவிர. (அது மடிவதில்லை; ஏனெனில்) அது (பச்சைப் புற்களைத்) தின்று வயிறு நிரம்பி விடும்போது சூரியனை நேராக நோக்கி(ப் படுத்துக் கொண்டு அசைபோடுகின்றது) சாணமிட்டு சிறுநீரும் கழிக்கின்றது. பின்னர் (வயிறு காலியானவுடன் மீண்டும் சென்று) மேய்கிறது. (இது போலவே உலகிலுள்ள) இந்தச் செல்வம் பசுமையானதும் இனிமையானதும் ஆகும். எனவே, ஒரு முஸ்லிம், தமது செல்வத்திலிருந்து ஏழைகளுக்கும் அநாதைகளுக்கும் வழிப்போக்கர்களுக்கும் கொடுத்துக் கொண்டிருக்கும்வரை, அது அவருக்குச் சிறந்த தோழனாகும். யார் முறையின்றி அதை எடுத்துக்கொள்கிறாரோ - அவர் உண்டும் வயிறு நிரம்பாதவனைப் போன்றவர் ஆவார். மேலும், மறுமை நாளில் அந்தச் செல்வம் அவருக்கு எதிரான சாட்சியாக அமையும்” எனக் கூறினார்கள்.

[சரியானது] - [இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்] - [புஹாரி - 1465]

விளக்கம்

ஒரு நாள் நபி (ஸல்) அவர்கள் மிம்பர் மீது அமர்ந்து தனது தோழர்களுடன் கதைத்துக் கொண்டிருக்கும் போது, இவ்வாறு கூறினார்கள் :
எனக்குப் பின்னர் நான் உங்களிடம் அதிகம் பயப்படுவது என்னவென்றால், இப்பூமியின் செல்வ வளங்களும், அலங்காரங்களும், கவர்ச்சிகளும் மற்றும் அவற்றில் உள்ள இன்பங்கள், பயிர்கள், ஆடைகள் என, நிலையற்றதாக இருப்பினும் மக்கள் பெருமைக்காகத் தேடும் அம்சங்கள் உங்களுக்குத் திறந்து கொடுக்கப்படுவதே!
அப்போது ஒரு மனிதர், 'உலக அலங்காரங்கள் அல்லாஹ்வின் ஓர் அருட்கொடையாக இருக்கும் போது, அவ்வருட்கொடை சோதனையாகவும், தண்டனையாகவும் மாற்றம் பெறுமா?' எனக் கேட்டார்.
நபியவர்கள் மௌனித்ததைக் கண்ட நபித் தோழர்கள், அம்மனிதர் நபியவர்களைக் கோபத்திற்குள்ளாக்கியதாக நினைத்து அவரைக் கண்டித்தனர்.
எனினும், நபியவர்களுக்கு வஹி இறங்கிக் கொண்டிருந்தது என்பது பின்பு தெளிவானது. நபியவர்கள் தமது நெற்றியில் இருந்து வியர்வையைத் துடைத்துக்கொண்டு, 'கேள்வி கேட்டவர் எங்கே?' எனக் கேட்டார்கள்.
அதற்கவர், 'நான்' என்று கூறினார்.
நபியவர்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்துவிட்டு, பின்பு இவ்வாறு கூறினார்கள்: உண்மையான நன்மைகள் நன்மையையே கொண்டுவரும். ஆனாலும், இந்த அலங்காரங்கள், முழுமையான நன்மை அல்ல. ஏனெனில், அவை குழப்பங்கள், போட்டி, மறுமையை விட்டும் திசை திருப்பல் ஆகிய கெடுதிகளை ஏற்படுத்துகின்றன. பின்பு அதற்கு ஓர் உதாரணமாக இவ்வாறு கூறினார்கள்: வசந்த காலத்தில் வளரும் பசுமையான சில பயிர்கள், கால்நடைகளுக்கு விருப்பமாக இருந்தாலும், அவை வயிற்றை நிரம்பச் செய்து, கொன்று விடுகின்றன. அல்லது இறப்புக்கு அருகாமையில் விட்டுவிடுகின்றன. ஆனால், பச்சைப் புற்களை சாப்பிடும் மிருகம், வயிற்றின் இரு ஓரங்களும் நிரம்பும் வரை சாப்பிட்டுவிட்டு, சூரியனை முன்னோக்கி, விட்டைகளை விட்டு விட்டோ, சிறுநீர் கழித்துவிட்டோ இருக்கும். பின்பு, தன் வயிற்றில் இருப்பவற்றை மீண்டும் அசை போட்டு, சப்பி விழுங்கிவிடும். அதன் பின்னர் மீண்டும் சாப்பிடும்.
எனவே, இந்தச் சொத்துக்கள் பசுமையான, இனிமையான பச்சை நிறத் தாவரங்களைப் போன்றவை. அதிகப் படுத்திக் கொள்வது ஒன்றில் கொன்று விடும். அல்லது மரணத்திற்கு அருகாமையில் விட்டுவிடும். ஆனால், தேவையான, போதுமான அளவு உணவை ஹலாலான விதத்தில் எடுத்துக் கொண்டவர்களைத் தவிர, அது பாதிப்பை ஏற்படுத்த மாட்டாது. சிறந்த முஸ்லிம் ஒரு முஸ்லிம் அதிலிருந்து ஏழைகளுக்கும், அநாதைகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும் கொடுத்துக் கொண்டிருக்கும் வரை அது சிறந்த சொத்தாகும். தகுதியான அளவு எடுப்பவருக்கு அதில் பரக்கத் செய்துகொடுக்கப்படும். தகுதியற்ற விதத்தில் எடுப்பவர், வயிறு நிரம்பாமல் சாப்பிட்டுக் கொண்டிருப்பவரைப் போன்றவராவார். மறுமையில் அது அவருக்கு எதிரான சாட்சியாக இருக்கும்.

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. இமாம் நவவி கூறுகின்றார்கள்: சொத்தை உரிய முறையில் எடுத்து, நற்கருமங்களுக்காக செலவழிப்பதன் சிறப்பு இதில் கூறப்பட்டுள்ளது.
  2. நபியவர்கள் இந்த ஹதீஸில் தனது சமுதாயத்தின் நிலை பற்றியும், அவர்களுக்கு உலக அலங்காரங்களும், குழப்பங்களும் திறந்து கொடுக்கப்படும் என்றும் விவரிக்கின்றார்கள்.
  3. உதாரணங்களைக் கூறி அர்த்தங்களைப் புரியவைப்பது நபியவர்களின் வழிமுறைகளில் ஒன்றாகும்.
  4. தர்மம் செய்யவும், பணத்தை நல்ல விதங்களில் செலவழிக்கவும் ஆர்வமூட்டுதல், கஞ்சத்தனத்தை எச்சரித்தல்.
  5. 'நன்மையானது தீமையை உருவாக்காது தான்' என்ற வார்த்தையின் ஊடாக, வாழ்வாதரம் (ரிஸ்க்) என்பது அதிகமாக இருப்பினும், அது நன்மையில் உள்ளது என்பதை விளங்கிக் கொள்ளலாம். உரியவருக்கு செலவழிக்காமல் உலோபித்தனம் காட்டுவது, மார்க்கம் கூறாத விதத்தில் வீணாகச் செலவளிப்பது போன்ற இடையூறான அம்சங்கள் ஊடாகவே தீமை என்பது அதனுள் நுழைகின்றது. அல்லாஹ், நன்மை என விதித்துள்ள எதுவும், தீமையாகவோ, அல்லாஹ் தீமை என விதித்துள்ள எதுவும் நன்மையாகவோ இருக்கமாட்டாது. எனினும், ஒருவனுக்கு நன்மையான ஓர் அம்சம் கொடுக்கப்பட்டிருந்தாலும், அவனது செயற்பாடு களினால், தீமையைக் கொண்டுவரும் ஏதாவதொன்று அதில் இடைநுழைய வாய்ப்புள்ளது.
  6. சிந்திக்க வேண்டிய அமச்ங்களில் அவசரப்பட்டு பதில் வழங்காமல் இருத்தல்.
  7. தீபீ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: இங்கு நான்கு தரப்பினரைப் புரிந்துகொள்ளலாம். ஒருவன் தனது எலும்புக்கள் வீங்கும் வரை, இடைவிடாமல், மிதமிஞ்சி, இன்பத்தை எதிர்பார்த்து நிறையவே சாப்பிடுகின்றான். இவன் வேகமாகவே அழிவைச் சந்திப்பான். இன்னொருவன் அதேபோன்று சாப்பிட்டுவிட்டு, அதனால் நிலைகொண்டுள்ள நோயைக் குணப்படுத்திக்கொள்வதற்காக பல தந்திரங்களைச் செய்கின்றான். ஆனாலும், அந்த நோய் அவனை மிகைத்து, அவனை அழித்து விடுகின்றது. இன்னொருவன், இவ்வாறே சாப்பிட்டு விட்டு, உடனடியாகவே அதன் பாதிப்புக்களை நீக்குவதற்கான பல முயற்சிகளை செய்து சமிபாடடைய்யச் செய்து தப்பித்துக்கொண்டான். இன்னொருவன், அளவுகடந்து, கூடுதலாக சாப்பிடாமல், பசியைப் போக்கி, உயிரைப் பாதுகாக்கும் அளவு மாத்திரமே சாப்பிட்டான். முதலாமவன் இறைநிராகரிப்பாளனைப் போன்றவன். இரண்டாமவன் காலம் கடக்கும் வரை தௌபா செய்யாமல் பராமுகமாக இருக்கும் பாவியைப் போன்றவன். மூன்றாமவன், பாவங்களையும் செய்து உடனே, ஏற்றுக் கொள்ளப்படும் தவ்பா செய்தவனைப் போன்றவன். நான்காமவன், உலகில் பற்றற்று, மறுமையில் ஆசையுள்ளவனைப் போன்றவன்.
  8. இப்னுல் முனீர் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: இந்த ஹதீஸில் மிக அற்புதமான சில உவமைகள் உள்ளன. முதலாவது, சொத்தையும், அதன் வளர்ச்சியையும் தாவரத்திற்கும் அதன் வளர்ச்சிக்கும் ஒப்பிட்டுள்ளமை. இரண்டாவது, சம்பாத்தியம், மற்றும் காரணிகளில் மூழ்கியிருப்பவனை புற்பூண்டுகள் சாப்பிடுவதில் மூழ்கிப் போயுள்ள மிருகங்களுக்கு ஒப்பிடுதல். மூன்றாவது, சொத்துக்களை அதிகம் தேடி, சேமித்து வைப்பதை உணவு மோகம், அதன் மூலம் வயிற்றை நிரப்புதல் ஆகியவற்றுடன் ஒப்பிடுதல். நான்காவது, சொத்தில் அளவுகடந்த கஞ்சத்தனம் காட்டும் அளவு, அதன் மீது மோகம் கொண்டுள்ள நிலையில் அதிலிருந்து செலவழிப்பதை மிருகங்களின் கழிவுகளுக்கு ஒப்பிடுதல். மார்க்கத்தில் இச்சொத்து அருவறுப்பானது என்பதையும் இது உணர்த்துகின்றது. ஐந்தாவது, சொத்துக்களை சேகரித்து, சேமித்து வைக்காமல் இருப்பவரை, சூரியனை முன்னோக்கி ஒரு பக்கமாக சாய்ந்து, ஓய்வெடுக்கும் ஆட்டிற்கு ஒப்பிடல். இந்நிலை அது அமைதியாகவும், ஆறுதலாகவும் இருக்கும் மிக அழகான ஒரு சந்தர்ப்பமாகும். அது தனது நலன்களைப் புரிந்துகொண்டுள்ளது என்ற விடயமும் இங்க உணர்த்தப்படுகின்றது. ஆறாவது, சொத்துக்களை சேமித்து, செலவழிக்காமல் தடுத்துக் கொண்டவரை, தனக்குப் பாதிப்பான அம்சங்களை விட்டும் தன்னைக் காத்துக் கொள்ளாமல், பராமுகத்தில் மரணிக்கும் மிருகத்திற்கு ஒப்பிடல். ஏழாவது, பணத்தை, எதிரியாக மாற வாய்ப்புள்ள ஒரு நண்பனுக்கு ஒப்பிடல். ஏனெனில், பெரும்பாலும், பணம் - மோகத்தின் காரணமாக - கட்டிக்காக்கப்படும். விளைவாக, உரியவர்களுக்கு செலவழிக்காமல் தடுத்துக் கொள்ளும் நிலை ஏற்படும். எனவே, அது அவ்வாறு தடுத்துக்கொள்பவர் தண்டிக்கப் படுவதற்கான காரணமாக அமைந்து விடும். எட்டாவது, சொத்துக்களை முறைகேடாகப் பெற்றுக் கொள்பவரை, வயிறுநிரம்பாமல் சாப்பிட்டுக் கொண்டே இருப்பவருக்கு ஒப்பிடல்.
  9. ஸின்தீ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: இந்த ஹதீஸில் கட்டாயமாக இரண்டு ஏவல்கள் உள்ளன. ஒன்று, அதனை உரிய முறையில் பெற்றுக் கொள்ளல். இரண்டாவது, அதனை உரிய விதத்தில் செலவளித்தல். இவ்விரண்டில் ஒன்று தவறும் பட்சத்திலும், அது பாதிப்பாகவே அமையும். இவ்விரண்டுக்கும் மத்தியில் ஒரு பிணைப்புள்ளது. முறையான விதத்தில் பொருளீட்டுபவனுக்கே அதை முறையாகச் செலவழிக்கும் பாக்கியமும் கிடைக்கும் என்றும் கூறலாம்.
மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு உருது ஸ்பானிய மொழி இந்தோனேஷியன் உய்குர் மொழி வங்காள மொழி துருக்கிய மொழி ரஷியன் போஸ்னியன் சிங்கள மொழி ஹிந்தி மொழி சீன மொழி பாரசீக மொழி வியட்நாம் மொழி தகாலூக் குர்தி ஹவுஸா போர்த்துகீசியம் மலயாளம் தெலுங்கு ஸ்வாஹிலி தாய்லாந்து بشتو Осомӣ Албанӣ السويدية الأمهرية الهولندية الغوجاراتية النيبالية Юрба الدرية الصربية Кинёрвондӣ الرومانية المجرية الموري Малагашӣ Канада الولوف الأوكرانية الجورجية المقدونية الخميرية البنجابية الماراثية
மொழிபெயர்ப்பைக் காண
மேலதிக விபரங்களுக்கு