அல்லாஹ்வின் தூதர் கூறியதாக இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் அறிவிக்கிறார்கள்: 'தனது ஆடையைத் (தரையில் படும் படி) தற்பெருமையுடன் இழுத்துக்கொண்டு சென்றவனை அல்லாஹ் (மறுமையில்) ஏறெடுத்தும் பார்க்கமாட்டான்.' [சரியானது] - [இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்] - [புஹாரி - 5783]
விளக்கம்
கரண்டைக்காலுக்கு கீழ் தற்பெருமை மற்றும் அகந்தையுடன் வேட்டி (இஸார்) மற்றும் ஆடையை அணிந்து செல்பவனை நபி முஹம்மது ﷺ அவர்கள் கண்டித்துள்ளார்கள். அவ்வாறு செய்பவர்ளை, மறுமை நாளில் அல்லாஹ் தனது அருட்பார்வை கொண்டு பார்க்கமாட்டான என்ற கடும் எச்சரிக்கைக்குரியவர்கள் என்றும் குறிப்பிடுகிறார்கள்.
ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்
'ஸவ்ப்' (ஆடை) என்பது உடலின் கீழ் பகுதியை மறைக்கக் கூடிய அனைத்தையும் குறிக்கும்; அதாவது பேன்ட், நீண்ட ஆடை, வேட்டி போன்ற அனைத்தும் இதில் அடங்கும்.
இஸ்பால் (கரண்டைக்கு கீழே ஆடையை தரையில் படுமளவிற்கு அணிவது) என்ற தடை ஆண்களுக்கு மட்டும் உரியது. இமாம் நவவி (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: பெண்களுக்கு இஸ்பால் (தரையில் படுமளவிற்கு அணிவது) அனுமதிக்கப் பட்டது என்பதில் அறிஞர்கள் அனைவரும் ஒருமித்த கருத்தைக் கொண்டுள்ளனர். மேலும், நபி முஹம்மது ﷺ அவர்கள் பெண்கள் தங்கள் ஆடையின் விளிம்பை ஒரு சான் (ذراع) நீண்டதாக அணிவதற்கு அனுமதி வழங்கியுள்ளார்கள் என்பது ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் மூலம் உறுதிப் படுத்தப்பட்டுள்ளது.
இப்னு பாஸ் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ஹதீஸ்களின் பொது அர்த்தத்தின் அடிப்படையில் இஸ்பால் தடை செய்யப்பட்டதும் ஹராமுமானதுமாகும். ஆனால் அதற்கான தண்டனை ஒரே அளவில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் அகந்தை (பெருமை) நோக்கமாகக் கொண்டவர் மற்றும் அவ்வாறு நோக்கமில்லாமல் செய்தவர் இருவரும் சமமானவர்கள் அல்லர்.
மேலும் இப்னு பாஸ் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: பெண் முழுவதும் அவ்ரத் (மறைக்கப்பட வேண்டியவள்) ஆவாள்; ஆகவே, அவள் தனது ஆடையை ஒரு சாண் அளவு தாழ்வாக அணிவதில் தடையில்லை. அது போதாவிட்டால், கரண்டைக்காலிலிருந்து ஆரம்பித்து ஒரு சான் அளவு தொங்க விடலாம்.
காழி இயாழ் அவர்கள் கூறுகிறார்கள்: பொதுவாக, ஆடை அணிவதில் தேவைக்கும் வழக்கத்திற்கும் அதிகமாக நீளமாகவும் அகலமாகவும் இருப்பது விரும்பதக்கது அல்ல (மக்ரூஹ்) என்று அறிஞர்கள் கூறியுள்ளனர். (அல்லாஹ்வே மிக அறிந்தவன்.)
இமாம் நவவி (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: கமீஸ் (சட்டை) மற்றும் இஸார் (கீழாடை) கீழ் நோக்கி இருப்பது விரும்பத்தகுந்த அளவு பாதி கால்வரை (முழங்காலுக்கு கீழ், கால் நடுப்பகுதி) ஆகும். அதற்கும் கரண்டைக்காலுக்கும்; இடையிலான அளவு நீண்டிருப்பது குற்றமல்ல (அனுமதிக்கப்பட்டது). கரண்டைக்காலுக்கு கீழே அணிவது குறித்து 'அந்தப்பகுதி நரகத்தில் உள்ளது' என்ற எச்சரிக்கை வந்துள்ளது. எனவே, இதனடிப்படையில் விரும்பத்தகுந்தது – பாதி கால்வரை பொதுவாக அனுமதிக்கப்பட்டது – அதற்கு கீழிருந்து கரண்டைக்கால் வரையிலாகும். கரண்டைக்கீழே அணிவது– தடை செய்யப்பட்டதாகும்.
இப்னு உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் '(அல்லாஹ் அவரை பார்க்கமாட்டான்)' என்ற வார்த்தை பின்வருமாறு விளக்குகிறார்: இதன் பொருள் இரக்கம் மற்றும் கருணை நிறைந்த பார்வையால் அல்லாஹ் நோக்கமாட்டான்; என்பதாகும். இது பொதுவான பார்வையை குறிக்கவில்லை; ஏனெனில் அல்லாஹ் தஆலாவின் அவதானத்தை விட்டும் எதுவும் மறைவதுமில்லை, அவனது பார்வையிலிருந்து எதுவும் விலகுவதில்லை. இங்கே பார்வை என்பது அவனது அருட்பார்வை என்பதையே குறிக்கிறது என்று குறிப்பிடுகிறார்.