ஹதீஸ்: நீ, பயனளிக்கவோ, தீங்கிழைக்கவோ சக்தியற்ற ஒரு கல் மாத்திரமே என்பதை நான் அறிவேன். நபியவர்கள் உன்னை முத்தமிடுவதை நான் கண்டிருக்காவிட்டால், நான் முத்தமிட்டிருக்க மாட்டேன்
உமர் (ரலி) அவர்களைத் தொட்டும் அறிவிக்கப்பட்டுள்ளதாவது, அவர்கள் ஒரு தடவை ஹஜருல் அஸ்வதிடம் வந்து, அதனை முத்தமிட்டுவிட்டு இவ்வாறு கூறினார்கள் : நீ, பயனளிக்கவோ, தீங்கிழைக்கவோ சக்தியற்ற ஒரு கல் மாத்திரமே என்பதை நான் அறிவேன். நபியவர்கள் உன்னை முத்தமிடுவதை நான் கண்டிருக்காவிட்டால், நான் முத்தமிட்டிருக்க மாட்டேன். [சரியானது] - [இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்] - [புஹாரி - 1597]
விளக்கம்
உமர் (ரலி) அவர்கள் ஒரு தடவை, கஃபாவின் மூலையில் இருக்கும் ஹஜருல் அஸ்வதிடம் வந்து, அதனை முத்தமிட்டுவிட்டு 'நீ, பயனளிக்கவோ, தீங்கிழைக்கவோ சக்தியற்ற ஒரு கல் மாத்திரமே என்பதை நான் அறிவேன். நபியவர்கள் உன்னை முத்தமிடுவதை நான் கண்டிருக்காவிட்டால், நான் முத்தமிட்டிருக்கமாட்டேன்.' என்று கூறினார்கள்.
ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்
தவாப் செய்பவர்கள் ஹஜருல் அஸ்வதுக்கு நேராக வரும் போது, - இலகுவாக முடியுமாக இருப்பின் - அதனை முத்தமிடுவது மார்க்கத்தில் உள்ளதாகும்.
ஹஜருல் அஸ்வதை முத்தமிடுவதன் நோக்கம் நபியவர்களைப் பின்பற்றுவதாகும்.
நவவி (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள் : இதன் அர்த்தம், அதற்கு நன்மை செய்யவோ, தீங்கிழைக்கவோ சக்தி கிடையாது என்பதாகும். மேலும், அது தீங்கிழைக்கவோ, நன்மையளிக்கவோ முடியாத ஏனைய படைப்புக்களைப் போன்று படைக்கப்பட்ட ஒரு கல் மாத்திரமே! ஹஜ்ஜுடைய காலப் பகுதியில் உமர் (ரலி) அவர்கள் இதனைப் பரப்புவதற்கான காரணமாவது, ஹஜ்ஜுக்காக வரும் பல்வேறு ஊர்களைச் சேர்ந்த மக்கள் அதனை நினைவில் வைத்துக்கொள்ளவும், எல்லா நாடுகளிலும் இது உரக்கக் கூறப்படுவதற்காகவும் ஆகும்.
வணக்கங்கள் வரையறுக்கப்பட்டவையாகும். அல்லாஹ்வும், அவனது தூதரும் மார்க்கமாக்கிய வற்றைத் தவிர வேறு எதுவும் மார்க்கமாக்கப் படமாட்டாது.
ஒரு வணக்கம் ஆதாரப் பூர்வமாகத் தரிபட்டால், - அதில் உள்ள நோக்கம் அறியப்படாவிட்டாலும் - அது செய்யப்பட வேண்டும். ஏனெனில், மக்கள் அவற்றை நடைமுறைப்படுத்துவதும், அவ்வாறான வழிபாடுகளில் ஈடுபடுவதும் எதிர்பார்க்கப்படும் நோக்கங்களில் உள்ளவையாகும்.
வணக்கம் என்ற அடிப்படையில் முத்தமிட மார்க்கம் காட்டித் தராத, கற்கள் போன்ற எதனையும் முத்தமிடுவதைத் தடுத்தல்.