ஹதீஸ்: அல்லாஹ் கூறுகின்றான் : ஆதமுடைய மகன் என்னை நோவினை செய்கின்றான். (ஏனெனில்) அவன் காலத்திற்கு ஏசுகின்றான். நானே காலமாக இருக்கின்றேன். அதிகாரம் என்னிடமே உள்ளது. இரவையும் பகலையும் நானே மாறச் செய்கின்றேன்
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ் கூறுகின்றான் : ஆதமுடைய மகன் என்னை நோவினை செய்கின்றான். (ஏனெனில்) அவன் காலத்திற்கு ஏசுகின்றான். நானே காலமாக இருக்கின்றேன். அதிகாரம் என்னிடமே உள்ளது. இரவையும் பகலையும் நானே மாறச் செய்கின்றேன். [சரியானது] - [இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்] - [புஹாரி - 4826]
விளக்கம்
ஹதீஸ் குத்ஸியில் அல்லாஹ் கூறுவதாக, நபியவர்கள் கூறுகின்றார்கள் : சோதனைகளும், வெறுக்கத்தக்க அம்சங்களும் நிகழும் போது, காலத்தை இகழ்ந்து, ஏசும் மனிதன், என்னைக் குறை கூறி நோவினை செய்கின்றான். ஏனெனில், நிகழும் அனைத்தையும் அல்லாஹ்வே நிர்வகித்து, செயற் படுத்துகின்றான். எனவே, காலத்திற்கு ஏசுவது என்பது, அல்லாஹ்வுக்கு ஏசுவதே! காலம் என்பது, (அல்லாஹ்வினால்) வசப்படுத்தப்பட்டுள்ள ஒரு படைப்பே. அல்லாஹ்வின் கட்டளை கொண்டே அதில் சம்பவங்கள் நிகழுகின்றன.
ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்
இந்த ஹதீஸ், நபியவர்கள் தனது ரப்பைத் தொட்டும் அறிவிக்கும் ஒரு ஹதீஸாகும். இதற்கு, 'அல்ஹதீஸுல் குத்ஸீ, அல்லது அல்ஹதீஸுல் இலாஹீ' எனப்படும். இதன் அர்த்தம், வார்த்தைகள் அனைத்துமே அல்லாஹ்வுடையதாகும். ஆனாலும், அல்குர்ஆனுக்கு மாத்திரம் உள்ள தனித்துவங்களாகிய, ஒதுவது வணக்கமாகக் கொள்ளப்படல், சுத்தம் பேணிக்கொள்ளல், அற்புதத் தன்மை போன்ற எதுவும் இதற்குக் கிடையாது.
நோவினை என்பது வேறு, தீங்கு என்பது வேறு. அறுவறுருப்பான ஒன்றைக் கேட்டதாலோ, பார்த்ததாலோ ஒரு மனிதன் நோவினைப் படலாம். ஆனால் அதனால் அவன் பாதிக்கப்படமாட்டான். மேலும், வெங்காயம், வெள்ளைப் பூண்டு போன்றவற்றின் துர்வாடை மூலம் அவன் நோவினைப் படலாம். ஆனால், அவற்றில் அவனுக்கு தீங்கு இல்லை.
அல்லாஹ் தஆலா, தனது அடியார்களின் சில கெட்ட செயல்களால் நோவினைப் படுகின்றான். ஆனால், அவற்றினால் அல்லாஹ் தீங்கிற்கு உள்ளாக மாட்டான். அல்லாஹ் தஆலா இன்னுமொரு ஹதீஸ் குத்ஸியில் இவ்வாறு கூறுகின்றான். என்னுடைய அடியார்களே! நீங்கள் எனக்குத் தீங்குசெய்வதற்கு, தீங்குசெய்யும் நிலையை அடையவே மாட்டீர்கள். மேலும், எனக்குப் பயன்தருவதற்கு, பயன்தரும் நிலையை அடையவே மாட்டீர்கள்.
காலத்தை ஏசுவது மற்றும் அதனைப் பற்றிப் பேசுவத மூன்று வகைப்படும்: 1. காலம் தான் அனைத்தையும் செய்வதாகவும், அதுவே எல்லா விடயங்களையும் நன்மை மற்றும் தீமை நோக்கி மாற்றுவதாகவும் எண்ணி அதனை ஏசுதல். இது பெரிய இணைவைப்பாகும். ஏனெனில், அல்லாஹ்வுடன் இன்னுமொரு படைப்பாளன் இருப்பதாக அவன் நம்புகின்றான். மேலும், நிகழ்வுகளை உருவாக்குவதை அவன் அல்லாஹ் அல்லாத ஒன்றுக்கு இணைக்கின்றான். 2. காலம் தான் அனைத்தையும் செய்கின்றது என்று எண்ணாமல், அல்லாஹ்தான் அனைத்தையும் செய்வதாக எண்ணிக்கொண்டும், தன்னிடம் வெறுப்பாக உள்ள இந்த விடயம் நிகழும் இடமாக அது இருப்பதால் அதற்கு ஏசுதல். இது தடுக்கப்பட்டதாகும். 3. குறைகூறுதல் இன்றி, வெறுமனே தகவலைக் கூறுவதை நாடல். இது அனுமதிக்கப்பட்டதாகும். லூத் நபி அவர்கள் 'இது நெருக்கடி மிக்க நாளாகும்' என்று கூறியதும் இவ்வாறான ஒன்றாகும்.