عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«قَارِبُوا وَسَدِّدُوا، وَاعْلَمُوا أَنَّهُ لَنْ يَنْجُوَ أَحَدٌ مِنْكُمْ بِعَمَلِهِ» قَالُوا: يَا رَسُولَ اللهِ وَلَا أَنْتَ؟ قَالَ: «وَلَا أَنَا، إِلَّا أَنْ يَتَغَمَّدَنِيَ اللهُ بِرَحْمَةٍ مِنْهُ وَفَضْلٍ».

[صحيح] - [متفق عليه] - [صحيح مسلم: 2816]
المزيــد ...

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்:
“இயன்றவரை சரியான அமல்களையே செய்யுங்கள். உங்களில் யாரும் தனது அமல்களால் மாத்திரம் தப்பிக்கமுடியாது என்பதை அறிந்துகொள்ளுங்கள்” அப்போது நபித்தோழர்கள், “நீங்களுமா? அல்லாஹ்வின் தூதரே” எனக் கேட்டபோது, “நானும் தான். அல்லாஹ் தனது அருளாலும், பேருபகாரத்தாலும் என்னை மறைத்துக் கொண்டாலே தவிர (என்னாலும் தப்பமுடியாது)” என்று கூறினார்கள்.

[சரியானது] - [இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்] - [முஸ்லிம் - 2816]

விளக்கம்

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தமது நபித்தோழர்களுக்கு, அமல் செய்யுமாறும், எல்லைமீறலோ, பொடுபோக்கோ இல்லாமல் இயன்றவரை அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுமாறும், தமது அமல்களில் உளத்தூய்மையையும் நபி வழிகாட்டுதலையும் பேணி, சரியானதைத் தேடிச் செய்து, ஒப்புக்கொள்ளப்பட்ட அமலாகவும் அதனை ஆக்கிக் கொள்ளுமாறும் தூண்டுகின்றார்கள். அப்போதுதான், அவ்வணக்கம் அவர்களுக்கு அல்லாஹ்வின் அருள் இறங்கக் காரணமாக அமையும்.
பின்பு, தமது அமல்களால் மாத்திரம் ஒருவர் தப்பிவிடமுடியாது. மாறாக, அல்லாஹ்வின் அருளும் அவசியம் என்பதையும் கூறுகின்றார்கள்.
அப்போது நபித் தோழர்கள், “உங்களையுமா? அல்லாஹ்வின் தூதரே! பிரமாண்டமான அளவுள்ள உங்களது அமலும் உங்களைக் காப்பாற்ற மாட்டாதா?” எனக் கேட்கின்றார்கள்.
அதற்கு நபியவர்கள், “நானும் தான்; அல்லாஹ் தனது அருளினால் என்னை மறைத்தாலே அன்றி (என்னால் தப்பமுடியாது)” என்று கூறினார்கள்.

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. நவவி (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: .. சரியானதைத் தேடி, அதைச் செய்யுங்கள். முடியாவிட்டால், சரிக்கு நெருக்கமானதைச் செய்யுங்கள். சரியானது என்பது எல்லைமீறலுக்கும், பொடுபோக்கிற்கும் இடைப்பட்டது. எனவே, எல்லைமீறிச் செல்லாதீர்கள். பொடுபோக்காகவும் இருக்காதீர்கள்.
  2. இப்னு பாஸ் (ரஹ்) அவர்கள் இவ்வாறு கூறுகின்றார்கள்: நல்லமல்கள் சுவனம் நுழைவதற்கான காரணிகளாகும். தீயசெயல்கள் நரகம் நுழைவதற்கான காரணிகளாகும். இந்த ஹதீஸ், சுவனம் நுழைதல் என்பது அமல்களால் மாத்திரமல்ல; அல்லாஹ்வின் மன்னிப்பும் அருளும் அவசியம் என்பதை உணர்த்துகின்றது. எனவே, அவர்கள் தமது அமல்கள் காரணமாகவே சுவனம் நுழைவார்கள். ஆனால், அவ்வாறு நுழையவைத்தது அல்லாஹ்வின் அருளும், மன்னிப்புமே!
  3. ஓர் அடியான் தனது அமல்கள் மூலம் எவ்வளவு உயர்வை அடைந்திருந்தாலும் அவன் பெருமிதம் கொள்ளவோ, தற்பெருமை கொள்ளவோ மாட்டான். ஏனெனில், அவனது அமல்களை விட அல்லாஹ்விற்கான கடமைகள் அதிகம் உள்ளன. எனவே, பயம், ஆதரவு ஆகிய இரண்டும் அவசியமாகும்.
  4. அடியார்களது அமல்களை விட, அவர்கள் மீதான அல்லாஹ்வின் அருளும் கருணையும் விசாலமானவை.
  5. சுவனம் நுழைவதற்கு நல்லமல்கள் காரணமாகும். ஆனாலும், சுவனத்தை அடைவதற்கு அல்லாஹ்வின் அருளும் கருணையும் அவசியமாகும்.
  6. கிர்மானீ (ரஹ்) கூறுகின்றார்கள்: எல்லா மனிதர்களுமே அல்லாஹ்வின் அருளின்றி சுவனம் நுழையமுடியாது என்றிருக்கும் போது, நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மாத்திரம் குறிப்பாக சொல்லப்படக் காரணம் யாதெனில், சுவர்க்கம் நுழைவது உறுதியான நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களே அல்லாஹ்வின் அருளினால் தான் சுவனம் நுழைவார்கள் என்றால், ஏனையோரும் நிச்சயம் அவ்வாறு தான் இருப்பர் என்பதாகும்.
  7. நவவி (ரஹ்) அவர்கள் இவ்வாறு கூறுகின்றார்கள்: “நீங்கள் செய்து கொண்டிருந்த (நற்) கருமங்களுக்காக சுவனபதியில் நுழையுங்கள்” (அந்நஹ்ல் : 32),
  8. “நீங்கள் செய்து கொண்டிருந்த (நன்மையான) தன் காரணமாக இந்த சுவர்க்கத்தை நீங்கள் அனந்தரங் கொண்டீர்கள்.“ (அஸ்ஸுக்ருப் : 72) போன்ற வசனங்கள் அமல்கள் மூலமே சுவனம் நுழையமுடியும் என்பதை உணர்த்துகின்றன. எனினும் இவை அந்த ஹதீஸுடன் முரண்படமாட்டாது. மாறாக, இவ்வசனங்களின் அர்த்தம் என்னவென்றால், சுவர்க்கம் நுழைவதென்பது அமல்களின் காரணமாகவே; ஆனால், அவ்வமல்களில் ஈடுபடுவதற்கான பாக்கியம், அவற்றில் உளத்தூய்மையைப் பேண வழிகாட்டல், அவற்றை ஒப்புக்கொள்ளல் என்பவை அல்லாஹ்வின் அருளும் கருணையும் ஆகும். இதன் மூலம், அவர் அமல்களால் மாத்திரம் சுவனம் நுழையவில்லை என்பதாகின்றது. ஹதீஸின் அர்த்தமும் அதுவே! எனவே, அவர் சுவனம் நுழைவது அவரது அமல்களின் காரணமாகவே; அவ்வமல்கள் அல்லாஹ்வின் அருளே!
  9. இப்னுல் ஜவ்ஸீ (ரஹ்) இவ்வாறு கூறுகின்றார்கள்: இதற்கு நான்கு பதில்கள் உள்ளன.
  10. 1. அமல் செய்வதற்கான பாக்கியம் அல்லாஹ்வின் அருளாகும். ஏற்கனவே அல்லாஹ் அவருக்கு அருள் செய்திருக்காவிட்டால், வெற்றியைப் பெற்றுத் தரும் ஈமானோ, இறைவழிபாடோ இருந்திருக்காது.
  11. 2. அடிமையிடமிருந்து பெறப்படும் பயன்கள் எஜமானுக்கே உரியது. அவனது நற்கருமங்களும் அவனது எஜமானுக்கே உரியது. எனவே, அதற்காக அவன் கூலி வழங்கினாலும் அது அவனது பெருந்தன்மையே!
  12. 3. சில ஹதீஸ்களில், சுவனம் நுழைவது அல்லாஹ்வின் அருளால்தான் என்றும், அங்கு அந்தஸ்துக்கள் பங்கு பிரிக்கப்படுவது அமல்களால் என்றும் வந்துள்ளது.
  13. 4. வணக்கவழிபாடுகள் சொற்ப காலத்திலேயே செய்யப்படுகின்றன. ஆனால் அதற்கான கூலி நிலையானது. எனவே, முடிவடையும் ஒன்றுக்கு முடிவடையாத நற்கூலி வழங்குவதென்பது, பேருபகாரமே அன்றி அமல்களுக்கு பதிலாக அல்ல!
  14. ராபிஈ (ரஹ்) இவ்வாறு கூறுகின்றார்கள்: அமல் செய்பவர், வெற்றிபெறவும், அந்தஸ்துக்களை அடையவும் தனது அமல்களை மாத்திரம் நம்பியிருக்கக் கூடாது. ஏனெனில், அவர் நன்மை செய்ததும் அல்லாஹ்வின் அருளினாலே! அவர் பாவத்தைத் தவிர்த்தும் அல்லாஹ்வின் பாதுகாப்பாலே! எனவே, அனைத்துமே அல்லாஹ்வின் அருளும் பேருபகாரமும் தான்!
மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு உருது ஸ்பானிய மொழி இந்தோனேஷியன் வங்காள மொழி துருக்கிய மொழி ரஷியன் போஸ்னியன் சிங்கள மொழி ஹிந்தி மொழி சீன மொழி பாரசீக மொழி வியட்நாம் மொழி தகாலூக் குர்தி ஹவுஸா போர்த்துகீசியம் மலயாளம் தெலுங்கு ஸ்வாஹிலி தாய்லாந்து بشتو Осомӣ Албанӣ السويدية الأمهرية الهولندية الغوجاراتية النيبالية Юрба الليتوانية الدرية الصربية Кинёрвондӣ الرومانية المجرية الموري Малагашӣ Канада الولوف الأوكرانية الجورجية المقدونية الخميرية البنجابية الماراثية
மொழிபெயர்ப்பைக் காண
மேலதிக விபரங்களுக்கு